நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை! குளிர்ச்சியில், குதூகலத்தில் மக்கள்!
rain in tamilnadu
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பெய்யாததால் பல பகுதிகளில் மக்கள் குடிநீருக்கே அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில் வெயில் சுட்டெரித்து மக்களை தாக்கி வருகிறது.
இந்தநிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம், வடபழனி, கீழ்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்வதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாவிட்டாலும் மக்களின் மனதை குளிரவைத்து சென்றுள்ளது இந்த மழை.