மெர்சல் படத்தில் அரசியலை விமர்சித்திருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல : பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!
மெர்சல் படத்தில் அரசியலை விமர்சித்திருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல
மெர்சல் படத்தில் அரசியலை விமர்சித்திருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
இதற்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அரசை விமர்சிக்கும் கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். வாக்குரிமை உள்ள அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், நேரடியாக வரட்டும். அதற்காக சினிமா மூலம் தவறான தகவல்களை பரப்பக்கூடாது.
மெர்சல் படத்தில் அரசியலை விமர்சித்திருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல. அந்த படத்தில் உண்மைக்கு மாறாக சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை நீக்க வேண்டும்.
சினிமா மூலம் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடக்கூடாது என்று காட்டமாக கூறினார்.
English Summary
Union Minister Pon Radhakrishnan against mersal movie