நடுங்கும் மஹாராஷ்டிரா திரையரங்குகள், சரிந்து போன பங்குகள்: தமிழகத்தில் இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?-
நடுங்கும் மஹாராஷ்டிரா திரையரங்குகள், சரிந்து போன பங்குகள்: தமிழகத்தில் இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?-
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் மக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை மட்டுமே வாங்க வேண்டிய அவசியம் இல்லை, வீ்ட்டில் இருந்தோ அல்லது வெளி உணவுப்பொருட்களை கொண்டு வந்து சாப்பிடலாம் என்ற மகாராஷ்டிர அரசின் உத்தரவைத் தொடர்ந்து திரையரங்குகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மஹாராஷ்டிரா அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, பிவிஆர், ஐநாக்ஸ் லீஸர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு முறையே 3.6 சதவீதம், 9.2 சதவீதமாகச் சரிந்தது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக விவாதமும் நடத்தக் கோரி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநில உணவுத்துறை அமைச்சர் ரவிந்திர சவான் பேசுகையில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து திரையரங்களில் படம் பார்க்க வரும் மக்கள் வீட்டில் இருந்தும், வெளியில் இருந்தும் உணவுகளைக் கொண்டு வந்து உண்ணலாம் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும்போது, மல்டிபிளக்ஸ் திரையரங்கு வருவாய் கடுமையாகப் பாதிக்கும். இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், திங்கள்கிழமை காலை மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே அது எதிரொலிக்கத் தொடங்கியது.
குறிப்பாக பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் லீஸர் நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. பிவிஆர், ஐநாக்ஸ் நிறுவனத்தின் வருவாயில் 75 சதவீதம் உணவுப்பொருட்கள் குளிர்பானங்கள் விற்பனையில் மூலம் கிடைத்து வருகிறது. அப்படி இருக்கையில் அரசின் இந்த உத்தரவு அந்த நிறுவனத்தின் பங்குகளை கடுமையாகப் பாதித்தது.
வர்த்தகம் முடிவில் பிவிஆர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 3.6 சதவீதமும், ஐநாக்ஸ் லீஸர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 9.2 சதவீதமும் சரிந்தது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவாகும்.
தமிழகத்தில் உள்ள திரையரங்களிலும் வெளி உணவுப்பொருட்களுக்கு அனுமதியில்லை. அங்கு மிக அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன், குளிர்பானங்களை மக்கள் வேறுவழியி்ன்றி வாங்கி உண்கின்றனர். இதேபோன்ற உத்தரவை தமிழக அரசும் பிறப்பித்தால் மக்களுக்கு செலவு குறையும்
English Summary
Multiplex operators’ shares tank to 10-month low