உர்ஜித் பட்டேல் விலகல்: இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பெரும் அடி- மன்மோகன் சிங் !
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கிக்கும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடந்து வரும் இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் நிதிக் கொள்கை, பொருளாதார அமைப்பு மீது மிகுந்த அக்கறை கொண்டவர் உர்ஜித் பட்டேல். அவர் திடீர் ராஜினாமா, துரதிருஷ்டமானது. இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பெரும் அடி என அவர் தெரிவித்தார்.