400 ஆண்டுகளாக தொடரும் தனிநாடு கோரிக்கை : ஆட்சியாளர்களை கைது செய்ய தயாராகும் மத்திய அரசு..! போர்களமாகும் தனி'நாடு'..!!
உலகின் பணக்கார பிரதேசங்களில் ஒன்றான கட்டலோனியா (தலைநகர்: பார்சிலோனா), தற்போது போர்க்களமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாக, ஆனால் தன்னாட்சியுடன் உள்ள அம்மாநிலத்தில் தனிநாடு கோரிக்கை வலுவடைந்துள்ளது.
"தனிநாடு எதற்காக?"
தனி மொழி, தனி பண்பாடு, தனி நாடாளுமன்றம், தனக்கென கொடி, தனி தேசிய கீதம் ஆகிய அடையாளங்களுடன் உள்ள பகுதி கட்டலோனியா. தனக்கென காவல்துறையை கொண்டுள்ள இம்மாநிலம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட போதுச் சேவைகளையும் தானே தீர்மானிக்கிறது.
ஐரோப்பிய பிராந்தியத்தில் மிக அதிக பொருளாதார வலிமைமிக்க இந்த பிரதேசம், ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 1000 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தன்மையுடன் விளங்கும் கட்டலோனியா, ஸ்பெயின் நாட்டின் ஒருபகுதியாக இருக்க விரும்பவில்லை என மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறது. 1641, 1873, 1931, 1934 என பலமுறை தனிநாடு அறிவித்து, அந்த முயற்சிகளில் தோல்வியடைந்தது.
தற்போதைய தனிநாடு போராட்டம் 2006 ஆம் ஆண்டில் தொடங்கியது. 2017 அக்டோபர் 1 ஆம் நாள் கட்டலோனியா அரசாங்கம் தனிநாடு கோரும் பொது வாக்கெடுப்பை நடத்தியது. அதில் 90% வாக்காளர்கள் தனிநாடு கோரி வாக்களித்தனர்.
"கட்டலோனியா: இனி என்ன?"
கட்டலோனியா தன்னாட்சி மாநில அரசின் பொது வாக்கெடுப்பை, மத்திய ஸ்பெயின் அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் தனிநாட்டினை அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் மிகவும் செழிப்பான நகரமான பார்சிலோனா நகரம் கட்டலோனியாவின் தலைநகரமாக உள்ள நிலையில், அந்த நகரில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக கூறியுள்ளன.
இத்தனை மிரட்டல்கள் இருந்தாலும் - "கட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பதாகவும், அந்த அறிவிப்பை செயலாக்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து, அதுகுறித்து ஸ்பெயின் தேசிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும்" கட்டலோனியா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால், "தனிநாட்டை அறிவித்துவிட்டீர்களா, இல்லையா", - என்பதை எட்டு நாட்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்பெயின் தேசிய அரசின் பிரதமர் நேற்று (11.10.2017) உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை தனிநாடு அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தால் - கட்டலோனியா தன்னாட்சி மாநிலம் என்கிற தகுதியையே நீக்கி, ஸ்பெயின் அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கட்டலோனியா கொண்டுவரப்படும். கட்டலோனியா ஆட்சியாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
"அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும்"
'எல்லா சிக்கல்களுக்கும் பொருள்தான் அடிக்கட்டுமானம்' என்கிற மார்க்சீய கருத்தாக்கம் கட்டலோனியாவில் தகர்ந்துள்ளது. ஏழையோ, பணக்காரனோ - தனிப்பண்பாடு கொண்ட குழுக்களின் தேசிய அடையாளங்களும் பன்முகத்தன்மையும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கட்டலோனியாவில் நடப்பதுதான் எல்லா இடங்களிலும் நடக்கும்.
கட்டலோனியா எனும் உலகின் பணக்கார பகுதியின் தனிநாடு போராட்டம் 400 ஆண்டுகளாக நடக்கிறது. அது வெற்றியடைந்தே தீரும்.
1931-ல் கட்டலோனியா நாட்டின் விடுதலையை அறிவித்த Francesc Macià நினைவுச்சின்னத்தின் படம். இடம் பார்சிலோனா, கட்டலோனியா தலைநகரம்.
தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!