ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ சோழ கட்டிடக்கலை இணைந்த மாதிரியான கோயில்! தமிழனின் திறமை!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ சோழ கட்டிடக்கலை இணைந்த மாதிரியான கோயில்!
பல்லவர் காலச்சிற்பக் கலையும், சோழர் காலச்சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலை கலந்த கலவையாக இருக்கிறது, முகுந்தேஸ்வரம்.
கொடும்பாளுரின் வடக்கு எல்லையில், சிதைந்து போயிருந்தாலும், வளமான புதுக்கவிதையாய் இன்னும், பொழிவு குறையாத கலை வளத்துடன் தோற்றம் அளிக்கிறது, முகுந்தேஸ்வரர் கோயில். திருமுதுகுன்றம் உடையார் என்று சொல்லப்படும், இறைவன், இங்கு மூலவராக, சிவலிங்க வடிவத்தில் காட்சி தருகிறார்.
முற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், இப்பகுதியில், வேளிர் சிற்றரசனாக விளங்கிய, மகிமாலய இருக்குவேள் என்ற பராந்தக வீர சோழன் குஞ்சரமல்லன் என்பவன், கி.பி.920-ஆம் ஆண்டு, இந்தக் கோயிலை எழுப்பினான். இந்தக் கோயிலின் பராமரிப்பிற்கு, ஒல்லையூர் கூற்றத்தில், நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியும், இங்குள்ள கல்வெட்டின் வாயிலாகத் தெரிய வருகிறது.
கோயில் வளாகத்தின் முன்பாக உள்ள மண்டப வளாகத்தின் முன்பாக, இரண்டு சிங்கங்கள் வாயில் காப்பானாக இருக்கின்றன. அதனை அடுத்துள்ள, சிதைந்த திருச்சுற்று மதில்களில் ஏறி, மேலே உள்ள கொத்தளம் போன்ற மாடப் பகுதிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் போல, வரிசையாக உள்ள காட்சி, இப்போது பார்த்தாலும் மெய் சிலிர்க்க வைக்கும்!
இந்த முகுந்தேஸ்வரரின் கருவரையும், முன் மண்டபமும், துவக்கத்தில் கட்டப் பட்டிருந்தாலும், அம்மன் கோயிலும், அதனை அடுத்துள்ள மண்டபமும், பிற்காலத்தில் கட்டப் பட்டவையாகும். கற்றளி என்ற முறையில், கட்டப்பட்ட கருவரையில் பதிக்கப் பட்டிருந்த செம்பாறைக் கற்கள், சூரிய ஒளியில் பட்டு நாணிச் சிவந்த பெண்ணின் முகத்தைப் போல தேஜஸாக ஒளிப்பதை, நாள் முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
English Summary
1000 years before temple sozha pallava designs